தனது குடும்பமாக நினைத்து வாழ்ந்தார் அமேதியில் தோற்றதால் ராகுல் காந்தி வேதனை: உபி. காங். தலைவர் பேட்டி

லக்னோ: ‘‘அமேதி மக்களவை தொகுதியை ராகுல் தனது குடும்பமாக நினைத்தார். இத்தொகுதியில் தோற்றது, அவரது இதயத்தில் வலியை ஏற்படுத்தி உள்ளது,’’ என உத்தர பிரதேச காங்கிரஸ் தலைவர் ராஜ் பாப்பர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக லக்னோவில் நேற்று அவர் அளித்த பேட்டி: அமேதி தொகுதியை ராகுல் காந்தி ஒரு நாடாளுமன்ற தொகுதியாக பார்க்கவில்லை. அதை தனது குடும்பமாக கருதினார்.

இத்தொகுதிக்காக அவர் நிறைய செய்துள்ளார். ஆனால், அவர் தனது குடும்பமாக நினைத்த மக்கள், அவருக்கு இதுபோன்ற முடிவை கொடுத்துள்ளனர். அவர் வயநாடு தொகுதி எம்பி.யான போதும், அமேதியில் தோற்றது அவருடைய இதயத்தில் வலியை ஏற்படுத்தி இருக்கிறது. ராகுல் தோற்றதால், அமேதி மக்களின் மனதிலும் கூட வலி இருக்கிறது.

அமேதிக்காக ராகுல் கடினமாக உழைத்தார். தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தியும் அதிக உற்சாகத்துடன் உழைத்தார். ஆனால், கட்சி தொண்டர்கள், உள்ளூர் தலைவர்கள் தங்கள் விசுவாசத்தை காட்டவில்லை. தோல்வியை அடுத்தவர்கள் மீது சுமத்துவதற்கு பதிலாக, 52 தொகுதிகளில் மட்டும் எப்படி வெற்றி பெற்றோம் என நாம்தான் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: