திருச்சியில் மாற்று இடத்தில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு சிலை: முதல்வருக்கு செல்வப்பெருந்தகை கடிதம்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு, திருச்சியில் ஒரு சிலை நிறுவ வேண்டும் என்ற சிவாஜி ரசிகர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, திருச்சி மாநகராட்சியில் சிலை அமைப்பதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருச்சி பாலக்கரை மெயின் ரோட்டில், 2011ல் சிலை நிறுவப்பட்டது. சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு குறுக்கிட்டதால் திறப்பு விழா நடைபெறவில்லை. அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

கடந்த அதிமுக ஆட்சியின் போது, பலமுறை ரசிகர்கள் கோரிக்கை விடுத்தும், தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவரும், சிவாஜி சமூகநலப்பேரவை தலைவருமான சந்திரசேகரன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், கையெழுத்து இயக்கம் நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் அவரது சிலை அதே இடத்தில் சாக்குப் பையால் மூடப்பட்ட நிலையில் கடந்த 13 ஆண்டுகளாக இருந்தது. இதற்கிடையில், சிலையை திறக்க வேண்டும் என்று, மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு ரசிகர் தொடர்ந்த வழக்கில், நீதிமன்ற உத்தரவு படி தற்போது சிலை நிறுவப்பட்டிருக்கும் சாலையில் சிலையைத் திறக்க அனுமதி அளிக்க முடியாது என்று தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

மதுரை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவில், சிவாஜி கணேசன் சிலையை இப்போது நிறுவப்பட்டிருக்கும் இடத்திலிருந்து அகற்றி, வேறொரு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் நிறுவ வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. எனவே, திருச்சியில், வேறொரு முக்கிய சந்திப்பில், சிவாஜி கணேசன் சிலையை நிறுவ நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். தன் கலைத்திறனால் தமிழினத்திற்குப் பெருமை சேர்த்தவரும், பெருந்தலைவர் காமராஜரின் சீடரும், காங்கிரஸ் கட்சியின் தூணாகவும், கலைஞரின் நண்பராகவும் திகழ்ந்தவர் சிவாஜி கணேசன். தியாகிகள், கலைஞர்கள் என்று அனைவருக்கும் நினைவிடம், சிலை என்று அமைத்து, அவர்களைப் போற்றிடும் தாங்கள், திருச்சியில் சிவாஜி கணேசன் சிலையையும் முக்கிய இடத்தில் நிறுவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post திருச்சியில் மாற்று இடத்தில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு சிலை: முதல்வருக்கு செல்வப்பெருந்தகை கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: