‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம் மூலம் மதத்தை அரசியலுடன் சேர்க்கிறது பா.ஜனதா: மம்தா காட்டம்

கொல்கத்தா: ‘‘ஜெய் ஸ்ரீராம் கோஷம் மூலம் மதத்தை அரசியலுடன் சேர்க்கிறது பாஜ’’ என மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, காரில் சென்று கொண்டிருந்த போது, பாஜ.வை சேர்ந்த தொண்டர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட்டனர். இதனால், ஆத்திரமடைந்த மம்தா, காரை விட்டு இறங்கி கோஷமிட்டவர்களை கண்டித்தார். மேலும் அவர்கள் பெங்காலிகள் இல்லை; குற்றவாளிகள் என கடுமையாக விமர்சித்தார். இதன் காரணமாக, மம்தா செல்லும் இடமெல்லாம் பாஜவினர் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷத்தை எழுப்பி, அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகின்றனர். இது குறித்து மம்தா தனது பேஸ்புக் பதிவில் நேற்று கூறியதாவது:

‘ஜெய் சாய் ராம்’, ‘ஜெய் ஸ்ரீராம்’ போன்றவை மதத்துடன் தொடர்புடையவை. ஆனால், ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற மத கோஷத்தை பாஜ தவறான நோக்கத்துடன் தனது கட்சி கோஷமாக பயன்படுத்திக் கொள்கிறது. இதன் மூலம், மதத்தை அரசியலுடன் கலக்கிறது. இதுபோன்ற கோஷங்களை எனது கட்சி பேரணியிலோ, நிகழ்ச்சிகளிலோ எழுப்புவதால் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. பிறர் மீது திணிக்கும் இதுபோன்ற அரசியல் கோஷங்களுக்கு நாங்கள் மதிப்பளிப்பது இல்லை.

காழ்ப்புணர்ச்சி, வன்முறை மூலம் வெறுப்பு கொள்கையை வேண்டும் என்றே பரப்பும் முயற்சியை நாம் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: