பெங்களூரு: நேர்மையான, அதிரடியான அதிகாரி பெயர் பெற்ற தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இது, கர்நாடகா போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூரை சேர்ந்தவர் அண்ணாமலை. கோயம்புத்தூரில் பள்ளி படிப்பை முடித்த இவர், 2011ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். 2 ஆண்டுகள் பயிற்சி பெற்ற இவர், 2013ம் ஆண்டு முதன் முறையாக கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டம் கார்கலாவில் ஏஎஸ்பி.யாக பதவியேற்றார். நேர்மையுடன் செயல்பட்ட இவர், கிரிமினல் குற்றங்களை தடுப்பதில் மிகவும் தீவிரம் காட்டி வந்தார். நீண்ட நாட்கள் சிக்கமகளூருவில் எஸ்.பியாக பணியாற்றிய அவர், கடந்தாண்டு பெங்களூரு தென் மண்டல டிசிபி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.