திருப்பதியில் முதல்வர் எடப்பாடி சுவாமி தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் சென்னையில் இருந்து கார் மூலம் திருமலைக்கு வந்தார். பின்னர் இரவு திருமலையில் வராகசுவாமி, ஹயக்ரீவர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவர், இரவு அங்கேயே தங்கினார். தொடர்ந்து நேற்று குடும்பத்தினருடன் ஏழுமலையான் கோயிலில், செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறும் அஷ்டதள பாத பத்ம ஆராதனை சேவையில் பங்கேற்று தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ, துணை செயல் அலுவலர் பாலாஜி ஆகியோர் ரங்கநாதர் மண்டபத்தில் வேத பண்டிதர்கள் மூலம் ஆசீர்வாதம் செய்து பிரசாதங்களை வழங்கினர்.

தொடர்ந்து கோயிலுக்கு வெளியே வந்த அவரை நிருபர்கள் சூழ்ந்துகொண்டு அரசியல் நிலவரம் குறித்து கேட்க முயன்றபோது, ‘நான் கோயிலில் தரிசனம் செய்ய வந்துள்ளேன். அரசியல் வேண்டாம்’ என்று கூறியபடியே சென்றுவிட்டார். பின்னர் கோயிலுக்கு எதிரே உள்ள அகிலாண்டம் அருகே தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி எடப்பாடி பழனிசாமி வழிபட்டார். இதையடுத்து பேடி ஆஞ்சநேய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த முதல்வர், சிறிது நேர ஓய்வுக்குப் பின் சென்னை புறப்பட்டு சென்றார்.

Related Stories: