திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் சென்னையில் இருந்து கார் மூலம் திருமலைக்கு வந்தார். பின்னர் இரவு திருமலையில் வராகசுவாமி, ஹயக்ரீவர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவர், இரவு அங்கேயே தங்கினார். தொடர்ந்து நேற்று குடும்பத்தினருடன் ஏழுமலையான் கோயிலில், செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறும் அஷ்டதள பாத பத்ம ஆராதனை சேவையில் பங்கேற்று தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ, துணை செயல் அலுவலர் பாலாஜி ஆகியோர் ரங்கநாதர் மண்டபத்தில் வேத பண்டிதர்கள் மூலம் ஆசீர்வாதம் செய்து பிரசாதங்களை வழங்கினர்.