அமேதி: ஸ்மிருதி இரானியின் வெற்றிக்காக பணியாற்றிய அவரது உதவியாளர், நள்ளிரவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். உத்தரப் பிரதேசத்தில் அமேதி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜ சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிட்டார். கடந்த 2014ம் ஆண்டு இதே தொகுதியில் ராகுலிடம் தோற்ற போதிலும் இந்த தேர்தலில் ஸ்மிருதி வெற்றி பெற்றார். தேர்தலுக்கு முன்பாக பராலியா பகுதியில் உள்ள மக்களுக்கு ஸ்மிருதி காலணிகளை பரிசாக கொடுத்தார். இந்த காலணிகளை கிராம மக்களுக்கு விநியோகம் செய்ய உதவியவர் முன்னாள் கிராம தலைவரான சுரேந்திர சிங் (50). இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு தனது வீடு அருகே 2 மர்ம நபர்களால் சுரேந்திர சிங் சுட்டப்பட்டதில் பரிதாபமாக இறந்தார். அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வெற்றி பெற்ற நிலையில் அவருக்கு உதவியாளராக இருந்த சுரேந்திர சிங் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.