கொழும்பு: ‘‘இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தில், மனித குண்டு தாக்குதல் நடத்த இலங்கையில் உள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தீவிரவாதிகளை, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அமைப்புதான் தூண்டியது’’என சிறையில் இருந்து வெளிவந்த இலங்கை புத்த மதத் துறவி கூறியுள்ளார். இலங்கையில் கடந்த மாதம் 21ம் தேதி 3 தேவாலயங்கள் மற்றும் 3 நட்சத்திர ஓட்டல்களில் மனித குண்டு தீவிரவாதிகள் 9 பேர் தாக்குதல் நடத்தினர். இதில் 260 பேர் பலியாயினர். இந்த சம்பவம் தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த புத்தமதத் துறவி கலகோதாத்தே ஞானசாரா நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:தமிழகத்தைச் சேர்ந்த அயூப் மற்றும் அப்தீன் ஆகியோர் இலங்கை வந்து அப்துல் ரசீக் என்பவரை சந்தித்தனர். அவர்கள்தான் இங்குள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினரை ஈஸ்டர் அன்று தாக்குதல் நடத்த தூண்டினர். இலங்கை தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டனர். ஆனால் முக்கிய நபர் ரசீக் மட்டும் இன்னும் சிக்கவில்லை. அவர் பாதுகாப்பு படையினரை தவறாக வழிநடத்துகிறார். அவர் விரைவில் பிடிபடுவார்.