சென்னை: சிங்கப்பூர் விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அது, சென்னையில் தரை இறக்கப்பட்டதால் 172 பேர் உயிர் தப்பினர். திருச்சியில் இருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் தனியார் பயணிகள் விமானம் நேற்று அதிகாலை 1.30 மணிக்கு சிங்கப்பூருக்கு புறப்பட்டது. விமானத்தில், 165 பயணிகள், 7 விமான சிப்பந்திகள் பயணம் செய்தனர். அதிகாலை 2.45 மணியளவில், விமானம் சென்னையை கடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென இயந்திரகோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். சிறிதுநேரத்தில் குபுகுபுவென புகை வந்து, தீப்பிடித்தது. உடனே தலைமை விமானி, சென்னையில் உள்ள விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை அவசரமாக தொடர்பு கொண்டு, நிலைமையை விளக்கினார். இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் விமானம் தரை இறங்க அனுமதி கிடைத்தது.இந்நிலையில். அதிகாலை 3.30 மணியளவில் விமானம், சென்னையில் பத்திரமாக தரையிறங்கியது. 172 பேரும் கீழே இறக்கப்பட்டனர். தீயணைப்பு படைவீரர்கள், துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.