தஞ்சை: தமிழகம் மற்றும் புதுவையில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் மரக்காணம் பகுதியில் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 244 இடங்களில் ஆய்வு மேற்கொண்டு ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு டெல்டாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக விவசாய சங்கங்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுமையாக கைவிடக் கோரி திருவாரூர் மாவட்டத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக விவசாயிகளின் தன்னெழுச்சியான போராட்டங்கள் வெடித்துள்ளது. நேற்று 3ம் நாளாக கோட்டூர் அருகே பனையூர் ஊராட்சி மருதூர் கிராமத்தில் பருத்தி வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களின் உயிரை கொடுத்தேனும் மத்திய அரசின் நாசக்கார திட்டத்தை முறியடிப்போம் என விவசாயிகள் சூளுரை எடுத்தனர். இந்நிலையில் திருத்துறைப்பூண்டி அருகே ராயநல்லூரில் வயலில் இறங்கி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வைகோ கண்டனம்விவசாய நிலங்களை பாழ்படுத்தும் முயற்சியில் கெயில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது கண்டனத்துக்குரியது என வைகோ தெரிவித்துள்ளார். காவிரி பாசன பகுதிகளில் இதுபோன்ற திட்டங்களை மேற்கொள்ள தமிழக அரசு தடைவிதிக்க வேண்டும் நாகை மாவட்டம் சீர்காழி பகுதியில் விளைநிலங்களில் கெயில் எரிவாயு குழாய் பதிப்பதற்கு வைகோ கண்டனம் தெரிவித்தார்.