சென்னை: பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் எனக்கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. அப்போது அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்தில் உள்ள பொன்பரப்பி கிராமத்தில் தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் பகுதியில் ஒரு கும்பல் நுழைந்து தாக்குதல் நடத்தியது. இதில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. தேர்தல் நாளில் நடந்த இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்நிலையில் பொன்பரப்பி பகுதியை சேர்ந்த விஷ்ணுராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தனது வாக்குச்சாவடியில் நடந்த வன்முறை காரணமாக தன்னால் வாக்களிக்க முடியவில்லை. எனவே அந்த பகுதியில் மீண்டும் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கேட்டிருந்தார்.