பாலக்காடு: கேரள மாநிலத்தில் பிரசித்திப் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா நேற்று விமர்சையாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கேரளாவில் பாலக்காட்டை அடுத்த திருச்சூரில் உள்ள வடக்குநாதர் கோயில் நேற்று பூரம் விழா நடந்தது. முன்னதாக வடக்குநாதர் கோயில் தெற்கு கோபுர வாசலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பாரமேற்காவு திருவம்பாடி தேவஸ்தான கோயில் யானைகள் மீது வண்ணமுத்து மணி குடைமாற்றம் நிகழ்ச்சி ஆரவாரத்துடன் நடந்தது. விழாவையொட்டி திருச்சூர் சுற்றுப்புற கோயில்களின் யானைகள் ஊர்வலமாக வந்து வடக்குநாதரை வணங்கிய பின் பஞ்சவாத்தியங்கள் முழங்க விழா தொடங்கியது. இதில், கணிமங்கலம் சாஸ்தா, சூரக்கோட்டுக்காவு, நெய்தலைக்காவு, செம்புக்காவு, திருவம்பாடி மற்றும் பாரமேற்காவு ஆகிய கோயில் யானைகள் வீதியுலா வந்து வடக்குநாதர் சிவனை வணங்கின.