புதுடெல்லி: நாடு முழுவதும், வரும் அனைத்து தேர்தல்களிலும் வாக்குப்பதிவு நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி மொத்தம் ஆறு கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது. இறுதிக்கட்ட தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் முகமது நிஷான் பாஷா என்பவர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மீனாட்சி அரோரா உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அமர்வில் புதிய கோரிக்கை ஒன்றை வைத்தார். அதில், “நாடு முழுவதிலும் எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் வாக்குப்பதிவு தொடங்கும் நேரத்தை காலை 5 மணியாக மாற்றி அமைக்க வேண்டும். ஏனெனில், இஸ்லாமிய மதத்தை சார்ந்தவர்கள் நோன்பு திறப்பது போன்ற நிகழ்வுகள் தொடர்பாகவும், நாடு வெப்பநிலை அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாலும் நேர மாற்றம் அவசியமாகிறது’’ என கூறியிருந்தார்.