மேற்கு வங்கத்தில் பாஜ தலைவர் அமித்ஷாவின் கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அங்கு மம்தாவின் சர்வாதிகார ஆட்சி நடப்பதாக பாஜ குற்றம்சாட்டியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் ஜாத்வாபூரில் நேற்று பாஜ தலைவர் அமித்ஷா பங்கேற்கும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கு அனுமதி கொடுப்பதற்கு நேற்று முன்தினம் இரவு மாநில அரசு மறுத்துவிட்டது. மேலும் அமித்ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கும் அனுமதி தரப்படவில்லை. மாநில அரசின் இந்த செயலுக்கு பாஜவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாஜவை சேர்ந்த தலைவரும், மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் இதுகுறித்து கூறுகையில், “இது ஜனநாயக படுகொலை. தேர்தல் ஆணையம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கிய தலைவர்களின் பிரசாரக் கூட்டத்துக்கு அனுமதி தரப்படவில்லை என்றால் தேர்தல் என்பதற்கு என்ன அர்த்தம். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தாவின் சர்வாதிகாரம்தான் பரவியுள்ளது. பாஜ தலைவர்களுக்கு அனுமதி மறுப்பதன் மூலமாக பாஜவிற்கு அதிகரித்து வரும் ஆதரவினால் மம்தா விரக்தி அடைந்துள்ளது தெரிகிறது” என்றார்.