புதுடெல்லி: சிறப்பாக செயல்படாத 1,200 ஐபிஎஸ் அதிகாரிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: கடந்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் மொத்தம் 4,940 ஐபிஎஸ்அதிகாரிகள் பணியில் இருந்திருக்க வேண்டும். ஆனால், அந்த காலக்கட்டத்தில் 3,972 ஐபிஎஸ் அதிகாரிகளே பணியில் இருந்தனர். இந்நிலையில், மோடி அரசு ஐபிஎஸ் அதிகாரிகளின் பணி பதிவேடுகளை ஆய்வு செய்யும் கொள்கையை கொண்டு வந்தது. இதன்மூலம், அந்த அதிகாரிகளின் செயல்பாடுகளை மதிப்பிடவும், சிறப்பாக செயல்படாதவர்களை அடையாளம் காணவும் முடியும். அனைத்து இந்திய பணிகள் (இறப்பு மற்றும் ஓய்வு பலன்கள்) விதி 1958ம் ஆண்டின்படி சிறப்பாக செயல்படாத சம்மந்தப்பட்ட அதிகாரியை பொதுவிருப்பத்தின் பேரில் ஓய்வு பெற அனுமதிக்கலாம்.