தமிழக அரசாங்கத்திற்கு தண்ணீர் பிரச்னை புரிஞ்சு இருக்கிறதா, புரியலையான்னு தெரியல. இப்போ சேலத்தில் வனத்துறையே மரத்தை வெட்டி கொண்டு இருக்கிறது. இந்த பக்கம் குடிமராமத்து பெயரில் ஏரியில் நாசம் செய்து கொண்டிருக்கின்றனர். களிமண் எந்த ஏரியிலும் இல்லை. தமிழக அரசு இப்போது தண்ணீர் பிரச்னையை புரிந்து கொண்டு என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள் என்று பார்த்தால் எதுவும் இல்லை. வெள்ளம், வறட்சி மாறிமாறி வருகிறது. வெள்ளத்தை தடுக்க, தண்ணீரை சேமிக்கவும் இல்லை; வறட்சி காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லை. இது தான் அரசின் செயல்பாடா என்று கேட்கத்தோன்றுகிறது. இயற்கைக்கு மரியாதை கொடுத்தால், அவற்றை இனியாவது காப்பாற்றினால், மரங்களை வளர்த்தால் தமிழகத்தில் எதிர்காலத்தில் வாழ முடியும். இல்லையென்றால், தமிழகத்தில் வாழ்க்கை இல்லை; பாலைவனமாகி விடும். இதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தை அரசு ஒழுங்காக வைத்திருந்தார்கள் என்றால் இப்போது தண்ணீர் பற்றாக்குறை வந்திருக்காது. எல்லா ஓடை, ஏரி, குளத்தில் கழிவு நீர் தான் திறந்து விட்டுள்ளனர். இந்த குளம் ஏரியை சுற்றி சீமை கருவேல மரங்கள் தான் முளைத்துள்ளது. இதையெல்லாம் சரி செய்யாமல் அரசு மக்கள் நலன் பற்றி பேசி கொண்டு இருப்பது வேதனையாக உள்ளது.
பள்ளப்பட்டி ஏரியை தூர்வார நாங்கள் பல மாதங்களாக கேட்டு வருகிறோம். ஆனால், எங்களுக்கு தூர்வார அனுமதி கொடுக்கவில்லை. ஆனால், அரசு ஒரு சில ஏரிகளை மாறி,மாறி தூர்வாரி வருகின்றனர். கம்மாபட்டி ஏரியை நாங்கள் தான் சரி செய்தோம். இப்போது, ஸ்மார்ட் சிட்டி எனக்கூறி நாங்கள் எடுத்து கொள்கிறோம் என்று அரசு கூறி விட்டது. இப்போது மக்கள் அந்த ஏரியை சுத்தம் செய்யும் பணிக்கு கூட அனுமதி தர அதிகாரிகள் மறுக்கின்றனர்.