திருமலை: ஐதராபாத்தில் நடிகர் சிரஞ்சீவி, நயன்தாரா பங்கேற்ற படப்பிடிப்பு அரங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தெலுங்கு திரையுலக மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம், ‘சைரா நரசிம்ம ரெட்டி’. 1800ம் ஆண்டில் சென்னை மாகாணத்தில் ஒன்றாக இருந்த ஆந்திர மாநில கர்னூலை மையமாக கொண்டு செயல்பட்டு வந்தவர் உழ்யாலவாடா நரசிம்ம ரெட்டி என்னும் பேரரசர். இவர், ஆங்கிலேயர்களின் கிழக்கு இந்திய கம்பெனிக்கு எதிராக போராடி வந்தார். இவரது வாழ்க்கை சரித்திரத்தை ஆதாரமாக கொண்டு தயாரிக்கப்படும் படம்தான் ‘சைரா நரசிம்மா ரெட்டி.’ இந்த படம் சுரேந்தர் ரெட்டி தயாரிப்பில் பல கோடி ரூபாய் முதலீட்டில் எடுக்கப்பட்டு வருகிறது. இதில், அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி உட்பட பல பிரபல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்நிலையில், இதன் படப்பிடிப்புக்காக ஐதராபாத் கண்டிப்பேட்டில் உள்ள சிரஞ்சீவிக்கு சொந்த பண்ணை வீட்டில் போடப்பட்ட அரங்கில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், அரங்கு முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. இதனால், 2 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டது.