தமிழக அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் கோமதி மாரிமுத்துவுக்கு ரூ10 லட்சம், ஆரோக்கிய ராஜீவ்க்கு ரூ5 லட்சம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு சார்பில் தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு ரூ10 லட்சம், வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவ்க்கு ரூ5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று வெளியிட்ட அறிவிப்பு:தமிழ்நாட்டைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து கத்தார் நாட்டில் தோஹா நகரில் நடந்து வரும் 2019ம் ஆண்டிற்கான ஆசிய தடகள போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று, இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்ததையொட்டி, அவரை பாராட்டி வாழ்த்துக்கடிதம் அனுப்பியிருந்தேன்.

அதேபோல், ஆசிய தடகள போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கலப்பு தொடர் ஓட்டப்பந்தய போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை புரிந்த ஆரோக்கிய ராஜீவ்வையும் பாராட்டி வாழ்த்துக் கடிதம் அனுப்பியிருந்தேன். விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில், பதக்கம் வெல்பவர்களுக்கு உயரிய ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், கோமதி மாரிமுத்துவுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 10 லட்சம் ரூபாயும், ஆரோக்கிய ராஜீவ்க்கு 5 லட்ச ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.கோமதி மாரிமுத்து மற்றும் ஆரோக்கிய ராஜீவ் ஆகிய இருவரும் மேன்மேலும் பன்னாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு, வெற்றிகள் பல பெற அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து தரும் என்பதை தெரிவித்துக் கொண்டு, எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: