பெங்களூரு: எல்லை பாதுகாப்பு பணியில் அடுத்தாண்டு முதல் ரோபோக்கள் பயன்படுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா, பாகிஸ்தான் எல்லை உட்பட பல்வேறு இடங்களில் எல்லை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அவர்கள் வெயில், பனி போன்ற பல்வேறு இயற்கை இன்னல்களை தாங்கி கொண்டு தங்கள் பணியை செய்து வருகின்றனர். ஆனாலும், இரவில் நிலவும் இருட்டை பயன்படுத்தி ஊடுருவல்காரர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதை தவிர்க்கும் வகையிலும், பாதுகாப்புத் துறையை மேம்படுத்தும் வகையிலும் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் விஞ்ஞானிகள் உள்ளனர். இந்நிலையில் பாதுகாப்புத்துறை, பெல் நிறுவனம், பெங்களூரில் உள்ள மத்திய ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய அமைப்புகளை சேர்ந்த விஞ்ஞானிகள் நவீன ரோபோவை உருவாக்கியுள்ளனர்.