சேலம்: தமிழகத்தில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைகளில் ஆடு, மாடு, நாய், பூனை உள்ளிட்ட பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்படி சிகிச்சைக்கு வரும் செல்லப்பிராணிகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால், ஊசி மூலம் மயக்க மருந்து செலுத்தி, அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் நடத்தி வருகின்றனர். இதில், நவீன முறையாக மயக்க மருந்தை வாயு மூலம் செலுத்தும் கருவியை மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய அரசு கால்நடை மருத்துவமனைகளில் பொருத்தும் பணியை அரசு மேற்கொண்டுள்ளது. இதன்படி சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள அரசு கால்நடை பன்முக மருத்துவமனையில், செல்லப்பிரானிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும் கூடத்தில், புதிதாக ‘சேவோஃப்ளூரேன்’ வாயு மயக்க மருந்து செலுத்தும் கருவியையும், நிழல் விழாத மின்விளக்கும் பொருத்தப்பட்டது. அந்த நவீன கருவி மூலம் மயக்க மருந்தை செலுத்தி செல்லப்பிராணிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும் பணி நேற்று தொடங்கியது.