சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த போபால் தொகுதி பா.ஜ வேட்பாளர் பிரக்யா தாகூரின் வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்காதது ஏன் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் பா.ஜ சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெண் துறவி பிரக்யா தாகூர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார். ‘மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையில் தன்னை கொடுமைப்படுத்திய மகாராஷ்டிரா மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு தலைவர் ஹேமந்த் கர்காரே, நான் விடுத்த சாபத்தால் தான் தீவிரவாதிகளின் குண்டுகளுக்கு பலியானார்’ என அவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.