கீவ்: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் நாட்டின் அதிபராக, 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ந் தேதி முதல் பதவியில் இருப்பவர், பெட்ரோ போரோஷெங்கோ. இவரது பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், மார்ச் 31-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் மொத்தம் 39 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். பெட்ரோ போரோஷெங்கோ, மீண்டும் அதிபர் ஆவதற்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து 38 பேர் போட்டியிட்டாலும் உண்மையான போட்டி அவருக்கும், அந்த நாட்டின் நகைச்சுவை நடிகரான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (வயது 41) என்பவருக்கும், முன்னாள் பிரதமர் யூலியா டிமோஷெங்கோவுக்கும் இடையேதான் நிலவியது. இந்த தேர்தலில் ஜெலன்ஸ்கி முன்னிலையில் இருந்தார். எனினும் எந்த வேட்பாளரும் 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெறவில்லை. உக்ரைன் அரசியலமைப்பு சட்டத்தின்படி, தேர்தலில் பதிவான ஓட்டுகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகளைப் பெறுகிறவர்தான் வெற்றி பெற முடியும். ஒரு வேளை அப்படி யாரும் பெறாவிட்டால் இரண்டாவது சுற்று தேர்தல் நடத்தப்படும். முதல் சுற்று தேர்தலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.