சென்னை: தர்மபுரி தொகுதியில் 10 வாக்குச்சாவடிகளை பாமகவினர் கைப்பற்றியதாக ஆதாரத்துடன் திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் நேற்று புகார் அளிக்கப்பட்டது.சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த புகார் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:பாமக. சார்பில் தர்மபுரி தொகுதியில் அன்புமணி போட்டியிட்டார். தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது, நாம் மட்டும்தான் வாக்குச்சாவடிகளில் இருப்போம், புரிகிறதா என்று பேசினார். இதுபற்றி கடந்த 5ம் தேதியன்று ஏற்கனவே புகார் கொடுத்தோம்.வாக்குச்சாவடிகளை அவர்கள் கைப்பற்றிவிட வாய்ப்புள்ளதாகவும் அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம். ஆனால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், 18ம் தேதிவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.