கோவை: பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கைதான மணிவண்ணனை காவலில் எடுத்து விசாரித்த சிபிசிஐடி போலீசார் நேற்று அவரை கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஆபாசபடம் எடுத்து மிரட்டி கொடுமை செய்ததாக திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரிராஜன் ஆகிய 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு நடந்து வருகிறது. இந்த வழக்கில் புகார் கொடுத்த பெண்ணின் அண்ணனை தாக்கியது தொடர்பாக பார் நாகராஜ், பாபு, வசந்த், செந்தில் ஆகியோர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தனர். இதில் தலைமறைவாக இருந்த மணிவண்ணன் பொள்ளாச்சி கோர்ட்டில் சரணடைந்தார்.
திருநாவுக்கரசின் நெருங்கிய நண்பராக இருந்ததால் மணிவண்ணனுக்கு பாலியல் வழக்கிலும் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்பட்டது. இதனை தொடர்ந்து திருநாவுக்கரசுவை போலீசார் 4 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். அதில் பல அ.தி.மு.க. பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் பாலியல் வழக்கு தொடர்பாகவும் மணிவண்ணனை கைது செய்த சிபிசிஐடி போலீசார், கடந்த 10ம் தேதி 3 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். காவல் விசாரணை முடிந்ததையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரை நேற்று கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் (பொறுப்பு) நீதிபதி வேலுச்சாமி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். மணிவண்ணனை வரும் 23ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி