புதுடெல்லி: ‘உத்தர பிரதேச முன்னாள் முதல்வர்கள் முலாயம் சிங் யாதவ், அவருடைய மகன் அகிலேஷ் யாதவ் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை நிலவரம் பற்றி 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்படி சிபிஐ.க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், அவரது மகனும் உத்தரபிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் குவித்து இருப்பதாக காங்கிரசை சேர்ந்த விஸ்வநாத் சதுர்வேதி என்பவர் கடந்த 2005ல் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இருவர் மீதான குற்றச்சாட்டை விசாரிக்கும்படி கடந்த 2007ம் ஆண்டு சிபிஐ.க்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து முலாயம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை 2012ல் விசாரித்த நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது. மேலும், சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான தற்போதைய நிலை குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி சிபிஐ.க்கும் உத்தரவிட்டது. இது தொடர்பாக கடந்த மார்ச் 25ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், அறிக்கையை 2 வாரத்திற்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.