தேர்தலில் எப்படியாவது சீட் வாங்கி எம்.பி ஆகிவிட வேண்டுமென்ற முனைப்பில் மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜ எம்.பி ஒருவர் தனது வயதை குறைத்து மீண்டும் வாய்ப்பை கேட்டுள்ளார்.நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் 75 வயதுக்கு மேற்பட்ட சீனியர்களுக்கு சீட் இல்லை என்று பா.ஜ., முடிவெடுத்துள்ளது. கட்சியின் மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் ஏற்கனவே வயதை காரணம் காட்டி வாய்ப்பு கொடுக்காமல் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். இதேபோல், கடந்த எட்டு முறை இந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவரும், தற்போதைய மக்களவை சபாநாயகருமான சுமித்ரா மகாஜன் 75 வயதை கடந்துவிட்டதால் இந்த முறை இந்தூர் தொகுதிக்கு வேட்பாளர் பெயரை அறிவிக்காமல் சஸ்பென்ஸ் வைத்து வருகிறது பாஜ தலைமை.
இந்நிலையில், மத்தியப்பிரதேச மாநிலத்தின் சாகர் மக்களவை தொகுதியின் சிட்டிங் எம்.பி லஷ்மிநாராயண் யாதவ் எப்படியாவது மீண்டும் சீட்டு வாங்கிவிட தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். இவர் கடந்த மக்களவை தேர்தலில் தனது வயது 73 என்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், இந்த முறை தனக்கு 74 வயது மட்டுமே ஆகியுள்ளதாக கூறி பாஜ தலைமையிடம் சீட் கேட்டு போராடி வருகிறார்.இதுகுறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வியெழுப்பியதற்கு, ‘‘நான் கடந்த தேர்தலில் செய்த வேட்புமனு குறித்த விவரங்களை மறந்துவிட்டேன். தெரியாமல் அப்படி பதிவாகியிருக்கலாம் என்று நினைக்கிறேன். எனது பிறந்த தினம் 1944ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் தேதி’’ என்று பதிலளித்து நழுவியுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி