டெல்லி: ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் பட்லரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் மன்கட் முறையில் அவுட் செய்தார். பந்துவீசும் போது கிரீசை விட்டு வெளியே சென்றதால் பந்துவீசுவதை நிறுத்தி அவரை ரன்அவுட் செய்தார். அஸ்வினின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். தான் கிரிக்கெட் விதிகளின் படி தான் நடந்து கொண்டேன் என அஸ்வின் விளக்கம் அளித்தார். ஒன்று விதியை மாற்றுங்கள் அல்லது அதை சரி செய்யுங்கள் என்று அவர் காட்டமாக தெரிவித்தார். அஸ்வின் மன்கட் முறையில் பட்லரை அவுட் செய்தது தொடர்பாக வீரர்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். வார்னே, வாகன், டீன் ஜோன்ஸ், பீட்டர்சன் உள்ளிட்ட வீரர்கள் அஸ்வின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர். கபில்தேவ், முரளி கார்த்திக் உள்ளிட்டோர் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். இதேபோல இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாகிகள் இடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகிறது. இந்த விஷயத்தில் அஸ்வின் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்து உள்ளார்.