பஞ்சாப்பில் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து புகாரளிப்பதற்கான சி விஜில் ஆப்பில் பொதுமக்கள் தேவையற்ற செல்பிக்கள், அற்பமான புகைப்படங்களை பதிவு செய்வதாக மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் வேட்பாளர்கள், தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்கவும், இதுகுறித்து பொதுமக்கள் புகாரளிக்கும் வகையிலும் சி-விஜில் என்ற புதிய ஆப்பை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. கேமரா வசதியுள்ள எந்த வகையான போனில் இருந்தும் இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் வேட்பாளர்களின் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்த போட்டோ, வீடியோக்களுடன் இந்த ஆப்பில் புகாரளித்தால் அது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். பஞ்சாப்பில் சி-விஜில் ஆப் மூலமாக தலைமை தேர்தல் அதிகாரிக்கு 60 சதவீதம் அற்பமான புகார்கள் வந்துள்ளது. இதுவரை பெறப்பட்ட 204 புகார்களில் 119 புகார்கள் அற்பமானவை என தெரியவந்துள்ளது.