துபாய்: தீவிரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த பாதுகாப்பு படையினருக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலேயே, ராணுவ தொப்பி அணிந்து விளையாட இந்திய அணி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தெரிவித்துள்ளது.ஆஸ்திரேலிய அணியுடன் ராஞ்சியில் கடந்த 8ம் தேதி நடந்த ஒருநாள் போட்டியின்போது, புல்வாமா தாக்குதலில் பலியான படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்திய அணி வீரர்கள் ராணுவ தொப்பி அணிந்து விளையாடினர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், பிசிசிஐ-க்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஐசிசி-க்கு கடிதம் அனுப்பியது.