கூடலூர்: கர்னல் பென்னிகுக்கின் 108வது நினைவுநாளை முன்னிட்டு லோயர்கேம்ப் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு விவசாயிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். முல்லை பெரியாறு அணையை கட்டிய இங்கிலாந்து பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுக்கின் 108வது நினைவு நாள் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இதனையொட்டி தேனி மாவட்டம், கூடலூர் அருகே லோயர்கேம்பில் உள்ள பென்னிகுக் மணி மண்டபத்துக்கு ஏராளமானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ஆர்.தேவர் தலைமையில் விவசாயிகள் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.