மதுரை: மதுரை பனகல் ரோட்டிலுள்ள மாநகர் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் நீர்மோர் பந்தலை அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று திறந்து வைத்தார். பின் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘அதிமுக கூட்டணிக்குத்தான் தேமுதிக வரும். சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில், தமிழகத்திற்கு தேவையான நலத்திட்டங்களை பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தி பேசியுள்ளார். அதிமுகவுக்கு தோல்வி பயம் இல்லை. எங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மோடிதான் இருப்பார். நாட்டின் சிறந்த தலைவர் அவர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயர் சூட்டுவது குறித்து பிரதமர்தான் முடிவு செய்வார். தேர்தல் சூறாவளியில் டி.டி.வி.தினகரன் காணாமல் போய்விடுவார். எந்த தேர்தல் வந்தாலும் நாங்கள் வெற்றி பெறுவோம்’’ என்றார்.