இஸ்லாமாபாத்: பாலகோட் காட்டு பகுதியில் 19 மரங்களை குண்டு வீசி அழித்ததாக இந்திய விமானப்படை விமானிகள் மீது பாகிஸ்தான் வழக்கு பதிவு செய்துள்ளது. பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா பகுதியில் பாலகோட்டில் இருந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் கடந்த மாதம் 26ம் தேதி குண்டு வீசின. இலக்குகள் தாக்கப்பட்டன என விமானப்படை தெரிவித்தது. ஆனால், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என பாகிஸ்தான் கூறிவருகிறது. இந்நிலையில், தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படை விமானிகள் மீது பாகிஸ்தான் வனத்துறை நேற்று வழக்கு பதிவு செய்தது. அதில், ‘இந்திய விமானப்படை விமானங்களின்் குண்டு வீச்சில் 19 மரங்கள் அழிந்து விட்டன’ என கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பருவநிலை மாற்ற அமைச்சர் மாலிக் அமின் அஸ்லாம் கூறுகையில், ‘‘பாலகோட் வனப் பகுதியில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பை மதிப்பிட்டு வருகிறோம். இதன் அடிப்படையில் ஐநா உள்ளிட்ட இதர அமைப்புகளில் புகார் அளிக்கப்படும். பாலக்கோட்டில் நடந்தது சுற்றுச்சூழல் தீவிரவாதம். அது சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கு முரணானது’’ என்றார்.