புதுடெல்லி: நாட்டின் மிக சுத்தமான நகரகத்துக்கான விருதை இந்தூர் தொடர்ந்து 3வது ஆண்டாக பெற்றுள்ளது. நாட்டின் மிக சுத்தமான நகரங்கள் பற்றிய ஆய்வை மேற்கொண்ட மத்திய அரசு, அது தொடர்பான பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், தொடர்ந்து 3வது முறையாக மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் நகரம் மிக சுத்தமான முதல் நகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2வது மிக சுத்தமான நகரமாக சட்டீஸ்கரின் அம்பிகாபூரும், 3வது இடத்தை கர்நாடகாவின் மைசூர் நகரும் பெற்றுள்ளன. இதேபோல்,மிக சுத்தமான சிறிய நகரத்துக்கான விருதை டெல்லி நகராட்சி கவுன்சில் பகுதி பெற்றது. சுத்தமான பெரிய நகரத்துக்கான விருதை குஜராத்தின் அகமதாபாத்தும், சுத்தமான வேகமாக வளரும் பெரிய நகரத்துக்கான விருதை சட்டீஸ்கரின் ராய்ப்பூரும் பெற்றுள்ளது. சுத்தமான நடுத்தர நகரத்துக்கான விருதை மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் பெற்றுள்ளது.