சென்னை: தமிழ் மற்றும் இந்திய கலாச்சாரத்திற்கு எதிரான வகையில் 90 எம்எல் திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை ஓவியாவை கைது செய்ய கோரி, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இந்திய தேசிய லீக் கட்சியின் மகளிர் அணி தலைவர் ஆரிபா ரசாக் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் வெளியாகி உள்ள “90 எம்எல்” திரைப்படம் தமிழ் மற்றும் இந்திய கலாச்சாரத்திற்கு எதிராக உள்ளது. படத்தில் இளம் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளை தங்களது கலாச்சாரத்திற்கு எதிராக செயல்பட தூண்டும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன. குறிப்பாக, மது அருந்துவது, புகைப்பிடிப்பது, படுக்கை அறை ரகசியங்களை அம்பலப்படுத்தும் வகையில் பேசுவது, ஆபாச வசனங்கள் போன்றவை இப்படத்தில் அமைந்துள்ளது.