ஸ்நகர் : காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் பாதுகாப்பு படையை சேர்ந்த 5 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். பொது மக்களில் ஒருவரும் பலியானார். ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள பாபாகண்ட் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் வீரர்கள் அங்கு விரைந்தனர். அவர்கள் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, தீவிரவாதிகள் பதுங்கி இருந்த வீட்டை நோக்கி வீரர்கள் முன்னேறியபோது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு வீரர்கள் தரப்பிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சண்டையில் 5 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.மேலும் பொது மக்களில் ஒருவரும் பலியானார். சண்டை நடந்த இடத்தில் பாதுகாப்பு படையினர், இளைஞர்கள் கும்பல் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பொதுமக்கள் 4 பேர் காயமடைந்தனர். தீவிரவாதிகளுடன் நள்ளிரவு வரை சண்டை தொடர்ந்தது.