கோவை: ராணுவ வீரர்களின் தியாகத்தை அரசியலுக்கு பயன்படுத்தாதீர்கள் என அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் பேசினார். கோவை மாநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தேர்தல் ஆலோசனை கூட்டம் ஆர்.எஸ்.புரத்தில் நேற்று நடந்தது. மாநில செயல்தலைவர்கள் மயூரா ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் பேசியதாவது:புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டபோது அதை எதிர்த்து முதன் முதலில் குரல் கொடுத்தவர் ராகுல்காந்தி. ஆனால், அப்போது பிரதமர் நரேந்திர மோடி போட்டோ ஷூட்டிங்கில் இருந்தார். வீரர்களின் உடல் டெல்லி கொண்டுவரப்பட்டபோது முதலில் வந்து அஞ்சலி செலுத்தியவரும் ராகுல்காந்திதான். ஆனால், பிரதமர் மோடி மூன்றரை மணி நேரம் தாமதமாக வந்து அஞ்சலி செலுத்தினார்.