புதுடெல்லி: ‘‘பாகிஸ்தான் அத்துமீறினால், பதிலடிக்கு தயாராக இருக்கிறோம்’’ என முப்படை உயர் அதிகாரிகள் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியுள்ளனர். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் 3 முகாம்கள் மீது இந்தியா விமானப்படை விமானங்கள் கடந்த 2 நாட்களுக்கு முன் குண்டு வீசின. இதையடுத்து பாகிஸ்தான் விமானங்கள் நேற்று முன்தினம் காஷ்மீர் பகுதியில் அத்துமீறி நுழைந்தன. இந்த விமானங்களை இந்திய விமானப்படை விமானங்கள் இடைமறித்து விரட்டின. இந்த சண்டையில் பாகிஸ்தான் எப்-16 ரக விமானத்தை இந்திய விமானி அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார். ஆனால், துரதிருஷ்டவசமாக அவரது விமானமும் அந்நாட்டு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. பாராசூட் மூலம் தரையிறங்கிய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் பாதுகாப்பில் உள்ளார். அவரை இன்று விடுவிப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. இந்நிலையில் டெல்லியில் நேற்று முப்படை உயர் அதிகாரிகள் பேட்டியளித்தனர். அப்போது விமானப்படை உயர் அதிகாரி ஏர்வைஸ் மார்ஷல் கபூர் கூறியதாவது:நேற்று முன்தினம் காலை பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்தியாவை நோக்கி வருவதை விமானப்படை ரேடார்கள் காட்டியது. அவற்றை வழிமறித்து தாக்குதல் நடத்த இந்திய விமானப்படை விமானங்கள் அனுப்பப்பட்டன. இதனால் பாகிஸ்தான் விமானங்களின் தாக்குதல் முயற்சி தக்க சமயத்தில் முறியடிக்கப்பட்டது. நமது ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் விமானங்களால் தாக்குதல் நடத்த முடியவில்லை. இந்த நடவடிக்கையில் விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 ரக போர் விமானத்தை விமானப்படை இழந்தது. அதில் இருந்து வெளியே இந்திய விமானி அபிநந்தன் பாராசூட் மூலம் பாகிஸ்தான் பகுதியில் தரையிறங்கினார். அவரை பாகிஸ்தான் ராணுவம் பிடித்தது. ஆனால் இந்திய விமானிகள் பலரை பிடித்ததாக பாகிஸ்தான் பொய் தகவல்களை தெரிவித்தது. பின்னர் ஒரே ஒரு விமானி மட்டும் தங்கள் வசம் உள்ளார் என கூறியது. ஆளில்லா இடங்களில் குண்டு வீசியதாக பாகிஸ்தான் கூறியது. ஆனால் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தவே அவர்கள் விரும்பினர்.