சென்னை: அரசு பணி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் சேரவும், கல்லூரிகளில் சீட்டு ெபற பணம் கொடுப்பவர் மீதும், வாங்குபவர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி. டி.கே.ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் லட்சக்கணக்கில் இளைஞர்கள் வேலை தேடி அலைந்து வருகின்றனர். இதுபோன்ற இளைஞர்களை சிலர் போலி வேலை வாய்ப்பு நிறுவனம் துவங்கி லட்சக்கணக்கில் பணத்தை பெற்று, அரசு வேலை வாங்கி தருவதாகவும், பொதுத்துறை நிறுவனங்களில் பணியில் சேர்த்து விடுவதாகவும் ஆசை வார்த்தை கூறி அவர்களிடம் இருந்து கோடி கணக்கில் பணம் பெற்று ஏமாற்றி வருகின்றனர். அதேபோல் மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரி சீட்டு மற்றும் பிரபல கல்வி நிறுவனங்களில் சீட்டு வாங்கி தருவதாக பணத்தை பெற்று கொண்டு தலைமறைவாகி விடுகின்றனர். இதுபோன்று பணம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளிப்போரின் எண்ணிக்கை தற்போது கணிசமாக அதிகரித்து வருகிறது.