புதுடெல்லி: பதினேழு பேர் உயிரிழந்த அர்பித் ஓட்டல் தீவிபத்தை அடுத்து, கரோல் பாக்கில் விதிகளை மீறிய இயங்கிய ஓட்டல்களின் தீ தடுப்பு உரிமம் ரத்து செய்யப்பட்டது. தற்போது மேலும் 75 ஓட்டல்களின் சுகாதார உரிமத்தை ரத்து செய்து வடக்கு மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. வடக்கு டெல்லி மாநகராட்சிக்கு உட்பட்ட கரோல் பாக் ஓட்டல், கடந்த 12ம் தேதி அதிகாலை தீவிபத்துக்குள்ளானது. இதில் 17 பேர் உயிரிழந்தனர். இந்தநிலையில் கரோல் பாக்கில் உள்ள ஓட்டல்களை ஆய்வு செய்த மாநகராட்சி, சுகாதாரமில்லாமல் இயங்கி வந்த 30 ஓட்டல்களின் சுகாதார உரிமத்தை ரத்து செய்தது. தொடர்ந்து நடைபெற்ற ஆய்வில், மேலும் 75 ஓட்டல்களின் சுகாதார உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த ஓட்டல்களுக்கான குடிநீர் மற்றும் மின் இணைப்பை நிறுத்தி கொள்ளும்படி கடிதம் எழுதியுள்ளதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.