திருமலை: திருப்பதி அடுத்த திருமலையில் ஏழுமலையான் கோயிலுக்கு வாயு திசையில் குமாரதாரா தீர்த்தம் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத பவுர்ணமி அன்று குமாரதாரா முக்கோடியில் பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். இங்கு செல்வதற்கு சரியான பாதை வசதி இல்லை. மிகவும் அபாயகரமான இங்கு ஆண்டுதோறும் மாசி மாத பவுர்ணமியன்று பக்தர்கள் சென்று புனித நீராடி வருகின்றனர். அதன்படி இந்தாண்டுமாசி மாத பவுர்ணமியொட்டி நேற்று பக்தர்கள் புனித நீராடினர். இதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் குமாரதாரா தீர்த்தத்திற்கு செல்லக்கூடிய வனப்பகுதியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பாபநாசம் அருகே பக்தர்களுக்கு குடிநீர், அன்னப் பிரசாதம் ஆகியவை தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டது.