ஐதராபாத் அரசு மருத்துவமனையில் நோயாளி வயிற்றில் கத்திரி வைத்து தைத்த டாக்டர்கள்

திருமலை: தெலங்கானா  மாநிலம், ஐதராபாத்தில் உள்ள நிம்ஸ் அரசு மருத்துவமனையில் மகேஸ்வர் சவுத்ரி என்பவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குடல் வால்வு அறுவை சிகிச்சை  செய்து கொண்டார். பின்னர் ஒரு வாரத்திற்கு பிறகு வீட்டிற்கு அனுப்பப்பட்ட நிலையில் தொடர்ந்து மகேஸ்வர் சவுத்ரிக்கு வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து மருத்துவரிடம் வந்து கேட்டபோது அறுவை சிகிச்சை செய்ததால்  வலி இருக்கக்கூடும் என கூறி அனுப்பி வைத்தனர். ஆனால் நாளுக்கு நாள் மகேஸ்வர் சவுத்ரிக்கு  வயிற்றில்  ஏதோ இருப்பது போன்ற உணர்வும் வலியும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதனால் அவர் நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தார். அப்போது அங்கு  மருத்துவர்கள் எக்ஸ்ரே செய்து பார்த்தபோது அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் வயிற்றில் கத்திரிக்கோலை வைத்து தைத்தது தெரியவந்தது.

இதையடுத்து நிம்ஸ் மருத்துவமனை அதிகாரியிடம் வந்து கேட்டபோது இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறி அனுப்பி வைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த மகேஸ்வர்  சவுத்ரியின் உறவினர்களுடன் நேற்று காலை மருத்துவமனையை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்த நிம்ஸ் மருத்துவமனை போலீசார் விரைந்து வந்து மகேஸ்வர் சவுத்ரி மற்றும் அவரது உறவினர்களை சமாதானப்படுத்தினர். மேலும், சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை  நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: