திருமலை: தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள நிம்ஸ் அரசு மருத்துவமனையில் மகேஸ்வர் சவுத்ரி என்பவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குடல் வால்வு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பின்னர் ஒரு வாரத்திற்கு பிறகு வீட்டிற்கு அனுப்பப்பட்ட நிலையில் தொடர்ந்து மகேஸ்வர் சவுத்ரிக்கு வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து மருத்துவரிடம் வந்து கேட்டபோது அறுவை சிகிச்சை செய்ததால் வலி இருக்கக்கூடும் என கூறி அனுப்பி வைத்தனர். ஆனால் நாளுக்கு நாள் மகேஸ்வர் சவுத்ரிக்கு வயிற்றில் ஏதோ இருப்பது போன்ற உணர்வும் வலியும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதனால் அவர் நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தார். அப்போது அங்கு மருத்துவர்கள் எக்ஸ்ரே செய்து பார்த்தபோது அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் வயிற்றில் கத்திரிக்கோலை வைத்து தைத்தது தெரியவந்தது.