சேலம்: தமிழகத்தில், முதன்முறையாக சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் பிளாஸ்டிக் பாட்டில் மறுசுழற்சி இயந்திரம் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்த்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருட்களை பயன்படுத்துவது குறித்து பல்வேறு விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் முதன்முறையாக சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் தனியார் நிறுவனம் சார்பில் ₹2லட்சத்தில் பிளாஸ்டிக் பாட்டில் மறுசுழற்சி இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இதனை மாநகராட்சி கமிஷனர் சதீஷ் நேற்று துவக்கி வைத்தார். இந்த இயந்திரத்திற்குள் 250 மில்லி முதல் 2.25 லிட்டர் வரையிலான காலியான பிளாஸ்டிக் பாட்டிலை போடும் போது, அவை மறுசுழற்சிக்கு ஏற்றவாறு அரைக்கப்பட்டு இயந்திரத்தில் சேகரமாகும்.