சென்னை: வட கிழக்கு பருவமழை முடிவுக்கு வந்த பிறகு தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக கடும் குளிர்காற்று வீசிவருகிறது. இரவிலும் கடுமையான பனிப்பொழிவு நீடித்து வருகிறது. இமய மலைப் பகுதியில் நிலவும் குறைந்த அளவு வெப்பம் காரணமாக நாடு முழுவதும் குளிர் காற்று வீசுகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழகம், புதுச்சேரியில் இரவில் பனிப்பொழிவு நீடித்து வருகிறது. தற்போது தமிழகத்தில் குறைந்த பட்சமாக 20 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும் என்பதால் கடுமையான பனிப்பொழிவு இருக்கும். நீலகிரி உள்ளிட்ட மலைப் பிரதேசங்களில் உறை பனியும் இருக்கும். இந்நிலையில் கடல் பகுதியில் இருந்து குளிர் காற்று வீசுவதால் இரவில் கடுமையான பனிபொழிவுடன், குளிர் காற்றும் வீசும். காலை 9 மணி வரைக்கும் பனிப்பொழிவு நீடிக்கும். பகல் நேரங்களில் வறண்ட வானிலை நிலவும். வறண்ட வானிலை இன்னும் 3 நாட்களுக்கு நீடிக்கும். பின்னர் காலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.