கொழும்பு : இலங்கையில் கடந்த ஒரு மாதமாக நிலவி வந்த அரசியல் குழப்பம், சர்ச்சைக்குரிய வகையில் நியமிக்கப்பட்ட ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததும் முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து மீண்டும் ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பதவியேற்றார். இதனால், அதிபர் சிறிசேனா - பிரதமர் ரணில் இடையே நிலவி வந்த மோதல் முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், பிரதமர் ரணில் தலைமையிலான 30 பேர் கொண்ட புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்றுக் கொண்டது. இதில், ரணில் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், குடியேற்றம், வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழில் பயிற்சி திறன் அபிவிருத்தி மற்றும் இளைஞர் நலத்துறை ஆகிய பொறுப்புகளை ஏற்றுள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சராக திலக் ஜனகா பதவியேற்றார்.