சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தொற்றுநோய் பாதிப்பு ஏற்படவில்லை என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விலங்குகள் வாயிலாக பரவும் தொற்று நோய் தடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். மேலும் குளோரின் கலந்த குடிநீரை பயன்படுத்தவும், குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்கவும், உணவு சார்ந்த கழிவு பொருட்களை உடனே அகற்றவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது என தெரிவித்தார். இதுவரை நடந்த மருத்துவ முகாம்களில் 9.40 லட்சம் பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.