டெல்லி: சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் அனைத்து விதமான விலங்குகளை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்க்கஸ் நிகழ்ச்சிகளுக்காக வன விலங்குகள் துன்புறுத்தப்படுவதாக விலங்குகள் நல அமைப்புகளிடமிருந்து மத்திய அரசுக்கு புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. எனவே சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் விலங்குகள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை விலங்குகள் நல அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. சர்க்கஸ் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பயிற்சி என்ற பெயரில் விலங்குகள் துன்பறுத்தப்படுகின்றன. இதனால் விலங்குகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். எனவே சர்க்கஸ் உள்ளிட்ட அனைத்து பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிலும் அனைத்து விலங்குகளையும் பயன்படுத்த தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக புதிய சட்ட வரைவை மத்திய அரசு விரைவில் கொண்டு வர உள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.