கம்மம்: ‘‘எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தில் வாக்களித்தபின், வாக்காளர் ஒப்புகை சீட்டை சரிபார்க்க வேண்டும்’’ என தெலங்கானா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார். எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தில் முறைகேடுகளுக்கு வாய்ப்புள்ளது, எனவே மீண்டும் வாக்குச் சீட்டை கொண்டு வர வேண்டும் என தேர்தலில் தோல்வியடையும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில், தெலங்கானாவில் டிசம்பர் 7ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கம்மம் வந்திருந்தார். தே.ஜ கூட்டணியிலிருந்து வெளியேறிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்த கூட்டத்தில் முதல் முறையாக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: நாம் தற்போது எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரம் பயன்படுத்துகிறோம். நீங்கள் யாருக்கு ஓட்டளித்தீர்கள் என்பதை விவிபிஏடி இயந்திரத்தில் சரிபார்க்க வேண்டும். நாம் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ள நமக்கு உரிமை உண்டு.