சென்னை: கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பயிர் காப்பீட்டுத் தொகையை அரசே செலுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்வதற்கான கெடுநாள் நவம்பர் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. கூட்டுறவு அமைப்புகளில் கடன் பெறுவதற்கான வாய்ப்புள்ள விவசாயிகளுக்கு மட்டுமே காப்பீட்டுத் தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. மற்ற விவசாயிகளில் பெரும்பாலோர் இத்திட்டத்தில் சேர்ந்து பணம் கட்டாத நிலை உள்ளது. 2017ம் ஆண்டு தமிழகத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலம் என்று மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து, அரசிதழிலும் வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக, விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடனை தள்ளுபடி செய்யாமல் நீண்டகால கடனாக மாற்றி அமைக்கப்பட்டது.