புதுடெல்லி: மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம், வட கொரிய வீராங்கனை கிம் ஹயாங்க் மியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் 6வது தங்கத்தை கைப்பற்றும் மகத்தான சாதனையை மேரி கோம் நெருங்கி இருக்கிறார். மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது. இதில், நேற்று நடந்த 48 கிலோ லைட் பிளைவெயிட் பிரிவு அரை இறுதிப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம் (35 வயது), வட கொரியாவின் கிம் ஹயாங்க் மியை எதிர்த்து விளையாடினார். ஒவ்வொரு சுற்றிலும் கடும் போட்டி நிலவியது. இதில் சிறப்பாக செயல்பட்ட மேரி கோம் 29-28, 30-27, 30-27, 30-27, 30-27 என்ற புள்ளிகளுடன் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். தங்கப் பதக்கத்திற்கான போட்டியில் மேரி கோம், உக்ரைனின் ஹன்னா ஒகோடாவை எதிர்கொள்கிறார். இப்போட்டி நாளை மறுதினம் நடக்க உள்ளது. இறுதிச் சுற்றுக்கு முன்னேறியதன் மூலம், உலக குத்துச்சண்டையில் மேரி கோம் தனது 6வது தங்கப் பதக்கத்தை நெருங்கி இருக்கிறார். இதுவரை உலக அளவில் இத்தொடரில் அதிக பதக்கங்கள் வென்ற வீராங்கனையாக மேரி கோமும், அயர்லாந்தின் கேட்டி டெய்லரும் உள்ளனர்.