சென்னை: தமிழகத்தில் 34 எம்சாண்ட் குவாரிகளில் மதிப்பீட்டு சான்று கேட்டு விண்ணப்பித்துள்ள நிலையில், அந்த குவாரிகளில் ஒரிஜினல் எம்சாண்ட் தயாரிக்கப்படுகிறதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். தமிழகத்தில் ஆற்றுமணலுக்கு பதிலாக எம்சாண்ட் குவாரிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால், ஒரு சில குவாரிகளில் ஜல்லியை உடைக்கும் இயந்திரங்கள் மூலம் வரும் தேவையற்ற துகள்களை எம்சாண்ட் எனப்படும் செயற்ைக மணல் என்ற பெயரில் விற்பனை செய்கின்றனர். இந்த துகள்களை கொண்டு வீடு கட்டினால் சில மாதங்களிலேயே இடிந்து விழும் ஆபத்து உள்ளது என்பதால் பொதுமக்கள் எம்சாண்ட் வாங்கி பயன்படுத்தவே அஞ்சும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஒரிஜினல் எம்சாண்ட் குவாரிகளை கண்டறிந்து, அந்த குவாரிகளுக்கு பொதுப்பணித்துறை சார்பில் மதிப்பீட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 110 எம்சாண்ட் குவாரிகள் மதிப்பீட்டு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தது. இதில், 66 குவாரிகளை ஆய்வு செய்து அந்த குவாரிகளுக்கு மதிப்பீட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அந்த குவாரிகள் பட்டியல் www.tnsand.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேலும், 34 குவாரிகள் எம்சாண்ட் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளது. இதில், 20 குவாரிகளில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தலைமையிலான பொறியாளர்கள் குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து அந்த குவாரிகளின் எம்சாண்ட் ஒரிஜினல் தானா என்பதை கண்டறிய அந்த மணலை ஆய்வக பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சூழ்நிலையில், 14 குவாரிகளில் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் விரைவில் ஆய்வு செய்கின்றனர் என்று அதிகாரி ஒருவர் ெதரிவித்தார்.