மும்பை: பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் சாட்சியம் அளித்தபோது குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக ‘பல்டி’ அடித்ததால் அரசு தரப்பில் அந்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட ரூ.2 லட்சம் நிதியுதவியை திருப்பி செலுத்த மும்பை செசன்ஸ் கோர்ட் உத்தரவிட்டது. கடந்த 2015ம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த ஒரு 17 வயது மைனர் பெண், தான் காதலித்த வாலிபருடன் வீட்டைவிட்டு வெளியேறி தலைமறைவானார். தங்கள் மகளை வாலிபர் கடத்திச் சென்றுவிட்டதாக அந்த பெண்ணின் பெற்றோர் முதலில் போலீசில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் நடந்து சில மாதங்களுக்கு பிறகு பெண் வீடு திரும்பினார். அப்போது அவர் கர்ப்பமாக இருந்தார். இதனால், மைனர் பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்ததாக வாலிபருக்கு எதிராக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மகாராஷ்டிரா அரசு, ‘மனோ தைர்யா’ என்ற திட்டத்தின் கீழ் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கும் ஆசிட் வீச்சு, குடும்ப வன்முறை போன்ற சம்பவங்களிலும் பாதிக்கப்படும் பெண்களுக்கும் நிதியுதவி வழங்கி வருகிறது.